பிரஜ்வல் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

பெங்களூரு : வீட்டு வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஜாமின் கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணை, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடந்து வருகிறது.

நேற்று மனுதாரர் தரப்பு வக்கீல் பிரபுலிங்க நேவத்கி வாதிட்டதாவது:

கடந்த முறை பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அரசு தரப்பில் 150க்கும் மேற்பட்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி உள்ளது. தற்போது இவர்களிடம் விசாரணை முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

மேலும், அரசு தரப்பு ஏராளமான டிஜிட்டல் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. இதை சரிபார்க்கும் பணி எளிதில் முடியாது. விசாரணையில் தாமதம் ஏற்பட்டால், இதை அடிப்படையாக கொண்டு ஜாமின் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம், பல வழக்குகளில் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, மனுதாரருக்கு ஜாமின் வழங்க வேண்டும்.

இதே வழக்கில், மனுதாரர் பிரஜ்வல் தந்தை ரேவண்ணா மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளிலும், குற்றஞ்சாட்டப்பட்டவரால், சாட்சிகள் மிரட்டப்படலாம் என்ற அச்சம் இருக்கும். இதற்காக நீதிமன்றம் குறிப்பிட்ட நிபந்தனைகள் விதிக்கலாம்.

விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், ''ஒவ்வொரு முறை விசாரணையின் போதும், குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் மீண்டும் மீண்டும் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதால், தாமதம் ஏற்படுத்தி வருகிறார்,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், விசாரணையை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement