நீடூரில் சமையல்காரர் வெட்டிக்கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மயிலாடுதுறை; நீடூரில் மர்ம நபர்கள் பட்டாகத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த சமையல்காரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது ஹாலிக்.36. சமையல்காரரான இவர் நேற்று முன்தினம் மதியம் நீடூரில் ஒரு திருமண மண்டபத்தின் எதிரில் மரத்தடி நிழலில் நண்பர்கள் இருவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.


அப்போது அங்கு டூவீலரில் மர்ம நபர்கள் 2 பேர் வந்துள்ளனர். பின்னால் அமர்ந்து வந்தவர் டூவீலரில் இருந்து இறங்கி ஓடிச் சென்று முகம்மது ஹாலிக்கை சரமாரியாக பட்டா கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து சாவகாசமாக பதட்டமின்றி டூவீலரில் ஏறி தப்பி சென்றார்.


இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய முகமது ஹாலிக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சேர்க்கப்பட்டார். தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.


இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை முகமது ஹாலிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த சம்பவத்தை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருவதுடன், மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement