ராணுவ முதலீடுகளை அதிகரிக்க நேட்டோ அமைப்பு முடிவு

2

தி ஹேக்: ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலீடுகளில், ஜி.டி.பி.,யில் 5 சதவீதம் உயர்த்துவது என நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது.



'நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ராணுவ ஒத்துழைப்புக்கானது இந்த அமைப்பு. ஐரோப்பாவில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்துக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என, நேட்டோ நாடுகளுக்கு, அமெரிக்கா சமீபத்தில் ஆலோசனை கூறியது. ஐரோப்பாவைத் தவிர மற்ற பிராந்தியங்களில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாக அமெரிக்கா தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.



இந்நிலையில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் 'நேட்டோ' அமைப்பின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, தனிப்பட்ட மற்றும் கூட்டுக் கடமைகளை உறுதி செய்ய 2035ம் ஆண்டிற்குள் முக்கிய பாதுகாப்பு தேவைகள் மற்றும் ராணுவம் தொடர்பான செலவினங்களுக்காக ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) 5 சதவீதம் முதலீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த அமைப்பில் உள்ள எந்த ஒரு நாட்டை தாக்கினாலும், அது அனைத்து உறுப்பு நாடுகள் மீதான தாக்குதல் என கருதுவது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


அதே நேரத்தில் இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னர், 2035 காலக்கெடுவுக்குள் இலக்கை அடைய முடியாது எனவும், இது நியாயமற்றது எனவும் ஸ்பெயின் கூறியது. பெல்ஜியமும் இதேபோன்ற கருத்தை மறைமுகமாக தெரிவித்துள்ளது. ஸ்லோவேகியா, தனது பாதுகாப்பு செலவினங்களை தாங்களே தீர்மானிப்போம் என அறிவித்துள்ளது.

Advertisement