தற்செயல் விடுப்பு போராட்டம் 1340 பேரில் 861 பேர் விடுப்பு 

சிவகங்கை: வருவாய்துறையினருக்கான 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று 861 பேர் விடுப்பு எடுத்து சிவகங்கையில் ஊர்வலம், தர்ணாவில் ஈடுபட்டதால் கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டன.

வருவாய்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர், வி.ஏ.ஓ., நில அளவையர், வரைவாளர், ஆர்.ஐ., தாசில்தார்கள் இணைந்து வருவாய்துறை கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், காலிபணியிடம் நிரப்ப வேண்டும். பணி நெருக்கடி தவிர்க்கவும், மேம்படுத்தப்பட்ட சம்பளம், கருணை அடிப்படை பணி நியமனம் 25 சதவீதம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய, தற்காலிக பணி நியமன திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று வருவாய்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய் துறையில் கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார், வி.ஏ.ஓ., அலுவலகங்களில் கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை 1340 பேர் வரை பணிபுரிகின்றனர்.

நேற்றைய போராட்டத்தில் 861 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால் கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ., அலுவலகங்களில் அன்றாட பணி கடுமையாக பாதிக்கப்பட்டன.

சிவகங்கையில் ஊர்வலம், தர்ணா



கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை ராமசந்திரா பூங்காவில் இருந்து கலெக்டர் அலுவலக ஆர்ச் வரை கூட்டமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், நாகேந்திரன், கார்த்திக், ராஜமார்த்தாண்டன், மாரி, பாண்டித்துரை பேசினர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

Advertisement