குடமுழுக்கை புறக்கணிக்கும் முதல்வர்: சேகர்பாபு விளக்கம்

3


சென்னை: 'இறைவனையோ, இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சிக்காமல் இருப்பவர், முதல்வர் ஸ்டாலின். அதுவே, இறைவனை வணங்குவதற்கு சமம்', என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தபின், அவர் அளித்த பேட்டி:


திருசெந்துார் முருகன் கோவில் குடமுழுக்கு விழா, தமிழிலும் நடைபெறும். ஏற்கனவே, இது தொடர்பாக, நீதிமன்றத்தில் நாங்கள் கூறி விட்டோம்.



இந்த ஆட்சியில்தான், மருதமலையில் உலகிலேயே உயரமான 184 அடி முருகன் சிலை நிறுவப்பட உள்ளது. மேலும், 826 கோவில்களில், 1,306 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று உள்ளன.

நாத்திகர்கள், ஆத்திகர்கள் ஒன்று சேர்ந்து, கொண்டு வந்த இந்த அரசு, 3,117 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி உள்ளது.



ஒரு கோவில் குடமுழுக்கில் கூட, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்கின்றனர். ஒருவரது வழிபாட்டு உரிமையில் தலையிடுவது நாகரிகம் அல்ல.


இறைவனையோ, இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சனம் செய்வது; எதிர் கருத்தை
கூறுவது என்பதை வாடிக்கையாகக் கொள்ளாதவர், முதல்வர் ஸ்டாலின். அதுவே, இறைவனை வணங்குவதற்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement