நியூயார்க் மேயர் தேர்தலில் திருப்பம்; வேட்பாளராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு

9


நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளி இளைஞர் ஜோஹ்ரம் மம்தானி, 33, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான மேயர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க உள்ளது. தற்போது நியூயார்க் மேயராக இருக்கும் எரிக் ஆடம், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். 2021 தேர்தலில் வெற்றி பெற்று மேயர் ஆனார்.

இந்தாண்டு தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட, நியூயார்க் நகர மக்களுக்கு பெரிதும் அறிமுகமில்லாத ஜோஹ்ரம் மம்தானி போட்டியில் குதித்தார். முன்னாள் கவர்னர் ஆண்ட்ரிவ் கியுமோவும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருந்தார்.



இதில் ஜோஹ்ரம் மம்தானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தாய் மீரா நாயர், ஒடிசாவைச் சேர்ந்தவர்; சினிமா இயக்குநர். 'சலாம் பாம்பே', 'காமசூத்ரா: ஏ டேல் ஆப் லவ்' ஆகிய படங்களை இயக்கியவர். இவரின் தந்தை மஹ்மூத் மம்தானி, குஜராத் முஸ்லிம்.


இந்நிலையில், தொழிலதிபராக இருந்த ஜோஹ்ரம் மம்தானி அரசியலில் இறங்கினார். 2021ல் நியூயார்க் மாகாண சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின் தற்போது மேயர் தேர்தலில் போட்டியிட விரும்பி ஜனநாயகக் கட்சி சார்பில் புதுமையான பிரசாரங்களை முன்னெடுத்தார். அதில் பாலிவுட் வசனங்களை பயன்படுத்தியது கவனம் பெற்றது.


இதன் காரணமாக ஜனநாயகக் கட்சி சார்பில் நடந்த வேட்பாளர்களுக்கான முதன்மை தேர்வில், சக வேட்பாளரான ஆண்ட்ரிவ் கியுமோவை விட 40 சதவீதம் அதிக ஆதரவு பெற்று வேட்பாளராக தேர்வானார்.

இதன் வாயிலாக நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி வேட்பாளர் என்ற பெருமையை ஜோஹ்ரம் மம்தானி பெற்றுள்ளார். நவம்பரில் நடக்கும் மேயர் தேர்தலில் இவர் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கர்ட்டிஸ் ஸ்லிவாவை எதிர்த்து போட்டியிடுவார்.

Advertisement