ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

ஆண்டிபட்டி:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதி நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். கடந்த சில மாதங்களில் அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரில், ஜூன் 15 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு நேற்று காலை 6:00 மணி முதல் அணையின் சிறிய மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணை நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதி 2, 3ல் உள்ள நிலங்களுக்கு நேற்று முதல் 7 நாட்களுக்கு மொத்தம் 1251 மில்லியன் கன அடி நீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 3000 கன அடியாக திறக்கப்பட்ட நீர் 3, 4ம் நாளில் வினாடிக்கு 2000 கன அடியாகவும், 5 மற்றும் 6ம் நாளில் வினாடிக்கு 1500 கன அடியாகவும், 7ம் நாளில் வினாடிக்கு 1479 கன அடியாகவும் குறைக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்படும். ஆற்றின் வழியாக செல்லும் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை கடந்து செல்வதால் 5 மாவட்ட கரையோர பொது மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது., என்றார். நேற்று அணை நீர்மட்டம் 63.09 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 571 கன அடி. பாசன நீருடன் அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.
மேலும்
-
படமெடுக்கப்பட்ட அதிசய கேலக்ஸி
-
அறிவியல் துளிகள்
-
சிந்தனையாளர் முத்துக்கள்!
-
மெக்சிகோவில் சாலை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல் கசிவு; பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர் கைது
-
மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு