மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு

4


சென்னை: நீர்பிடிப்பு பகுதிகளில் மழையால் பில்லூர் அணை நிரம்பியது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக, வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28ம் தேதி வரை, சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பவானிசாகர் அணை



நீர் வரத்து அதிகரிப்பால் 105 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,355 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 3962 கன அடியில் இருந்து 14,411 கன அடியாக உயர்ந்துள்ளது.



நீர்வரத்து அதிகரிப்பு



ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியில் இருந்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கபனி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.



நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் 2வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நிரம்பியது பில்லூர் அணை




மேட்டுப்பாளையம் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையால் இந்த ஆண்டு 3வது முறையாக பில்லூர் அணை நிரம்பியது.


பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. பில்லூர் அணையில் நீர் திறப்பால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement