போதைப்பொருள் கடத்தல் வழித்தடமாக மாறியுள்ளது திரிபுரா: முதல்வர் வேதனை

3

அகர்தலா : எல்லையை ஒட்டியுள்ள மாநிலம் என்பதால், போதைப்பொருள் கும்பல்கள் திரிபுராவை சட்டவிரோத கடத்தலுக்கான வழித்தடமாகப் பயன்படுத்துவதாக அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா குற்றஞ்சாட்டிஉள்ளார்.

அடிமை



ஆண்டுதோறும், ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


இதன் ஒருபகுதியாக, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுப்பது குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:



திரிபுரா மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. அசாம் மற்றும் மிசோரமுடனும் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.


மாநிலத்தின் புவியியல் அமைப்பு காரணமாக, போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், திரிபுராவை சட்டவிரோத கடத்தலுக்கான வழித்தடமாகப் பயன்படுத்துகின்றன.



மாநிலத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலத்தின் எட்டு மாவட்டங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு மையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

முழு முயற்சி



கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, போதைப்பொருள் மற்றும் பிற கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்வது சுமார் 103 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் அத்தகைய பொருட்களை அழிப்பதும் 132 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement