அபிநந்தனை சிறைபிடித்த அதிகாரி பாக்., பயங்கரவாதிகளால் கொலை

இஸ்லாமாபாத் : நம் விமானப்படையின் பெருமைமிகு வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, அந்நாட்டின் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

நம் நாட்டில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனத்தை குறி வைத்து, 2019ல் பாக்., பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் துல்லிய தாக்குதலை நம் ராணுவத்தினர் நடத்தினர்.

புல்வாமாவில் நடந்த தாக்குதலின்போது, 2019 பிப்ரவரி 27ல், பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பின், நம் விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாக்.,கில் சிறை பிடிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களுக்கு மேல், பாக்., வசம் இருந்த அவர், இந்தியாவின் முயற்சியால், சர்வதேச நாடுகள் அளித்த நெருக்கடியால் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, தேசிய ஹீரோவாக கொண்டாடப்பட்டார். 2021ல் அவருக்கு குரூப் கேப்டன் என பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அபிநந்தனை சிறைபிடித்தவர், பாக்., ராணுவத்தைச் சேர்ந்த சையத் முயிஸ் என கூறப்பட்டது. அவருக்கு மேஜர் என்ற பதவி உயர்வையும் பாக்., அளித்தது.

தற்போது ஆப்கானிஸ்தான் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், பயங்கரவாதிகள் அவரை நேற்று சுட்டுக் கொன்றனர்.

பாக்.,கின், கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சரர்கோஹா பகுதியில் அவரை கொன்றதாக, 'தெஹ்ரிக் இ தலிபான் இ பாகிஸ்தான்' என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அறிவித்து உள்ளனர்.

நம் விமானப்படை வீரர் அபிநந்தனை, பாக்.கில், சிறைபிடித்த ராணுவ அதிகாரிக்கே, அந்நாட்டில் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை நிலவுகிறது.

Advertisement