ஆர்டர் செய்ததோ மொபைல் போன்: பார்சலில் வந்ததோ சென்ட் பாட்டில்: அமேசான் மீது போலீசில் புகார்

7


சென்னை: 'அமேசான்' செயலி வாயிலாக, 35,000 ரூபாய் செலுத்தி, மொபைல் போன் ஆர்டர் செய்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, சென்ட் பாட்டில் அனுப்பியதுடன், அவருக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், நந்தவன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; தனியார் நிறுவன ஊழியர். இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த, 11ம் தேதி, 'அமேசான்' செயலி வாயிலாக, 'விவோ வி50' என்ற '5ஜி' மொபைல் போன் வாங்க, 'ஆர்டர்' செய்தேன். இதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 35,000 ரூபாய் செலுத்தினேன்.



கடந்த, 16ம் தேதி நான் வேலை செய்யும் நிறுவன முகவரிக்கு, அமேசான் நிறுவன டெலிவரி ஊழியர் மோகன் என்பவர் வந்தார். மொபைல் போன் வந்து இருப்பதாகக் கூறி, பார்சலை கொடுத்தார். அவர் கண்முன் பார்சலை பிரித்துப் பார்த்தேன். அதில், மொபைல் போனுக்கு பதிலாக, 'சென்ட் பாட்டில்' இருந்தது. இதனால், நான் வாங்க மறுத்து, திருப்பி எடுத்துச் செல்லுமாறு கூறினேன்.


அவரோ, 'உங்கள் பெயரில் இந்த பார்சல்தான் வந்துள்ளது. புகார் தெரிவிக்க வேண்டுமானால், எங்கள் நிறுவன அதிகாரி சரவணனிடம் பேசுங்கள்' என கூறி விட்டார். அவரது மொபைல் போன் எண்ணையும் கொடுத்தார். அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, 'பார்சல் மாறி வந்திருக்கலாம். மொபைல் போனை அனுப்பி வைக்கிறோம்' என்று கூறினார்.


அவர் சொன்னபடி பார்சல் வரவில்லை. இதனால், அமேசான் செயலி வாயிலாக புகார் பதிவு செய்தேன். அதன்பின், அமேசான் நிறுவன அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு, 'எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என, கூறிவிட்டார். போலீசில் புகார் அளிப்பதாகக் கூறியதும், கோபம்அடைந்த அவர், என்னை ஆபாசமாக திட்டினார். 'உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்றும் மிரட்டினார்.

என் புகார் மீது, அமேசான் நிறுவனம் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் மிரட்டல் விடுத்து வருகிறது. என்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த, அமேசான் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement