இறுதி மூச்சு இருக்கும் வரை... அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி

27


விழுப்புரம்: கருணாநிதி பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி செயல் தலைவராக இருக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பெற்றோரின் மண விழாவிற்கு மகன் வரவில்லை என்றால் தந்தைக்கு எப்படி இருக்கும். மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் எனக்கு அழைப்பு இல்லை. தமிழக மக்களுக்கு தொண்டு செய்த, எந்த தலைவர்களையும் கொச்சைப்படுத்த கூடாது.

இது பிரச்னை அல்ல



இது அரசியல் கட்சி நடத்தும் எல்லோருக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த கூடாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும். தேவைப்படும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். பா.ம.க.,வை நான் வளர்த்தது போல் இந்தியாவில் யாரும் இல்லை. அன்புமணி மன்னிப்பு கேட்கிறாரா? இல்லையா? என்பது பிரச்னை அல்ல.

மூச்சு இருக்கும் வரை....!



பா.ம.க.,வில் நிலவும் பிரச்னை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம். எல்லா பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு; அந்த முடிவு இன்னும் வரவில்லை. நான் தொடங்கிய கட்சியை 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வளர்த்தேன். நான் சென்ற முறை சொன்னேன். மீண்டும் சொல்கிறேன். பா.ம.க.,வை வளர்த்தது நான் தான். மூச்சு இருக்கும் வரை கட்சிக்கு தலைவராக செயல்படுவேன்.

நல்ல பொறுப்புகள்




கருணாநிதி பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி செயல் தலைவராக இருக்க வேண்டும். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின், அப்போது முணு முணுக்க வில்லை. கட்சியில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளே கொடுத்து இருக்கிறேன். நான் புதிதாக அளித்த பொறுப்புகள் எல்லாம் நிரந்தரம் தான். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


ஜி.கே. மணியின் மகன் மற்றும் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அன்புமணி ஏன் ஏற்கவில்லை என்ற கேள்விக்கு, ''யாம் அறியேன் பராபரமே, யாம் அறியேன் பராபரமே, யாம் அறியேன் பராபரமே'' என ராமதாஸ் பதில் அளித்தார்.

Advertisement