சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பியதால் குடும்பம் நடத்திய சிறுவன் தற்கொலை

சேலம்: சிறுவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சிறுமி கர்ப்பமாக, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். மருத்துவர்கள் புகார்படி போலீசார், சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பி, சிறுவன் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்தனர். இதில் மனமுடைந்த சிறுவன், தற்கொலை செய்து கொண்டான்.

சேலம், உடையாப்பட்டியை சேர்ந்தவர் மவுலீஸ்வரன், 17. இவர், 10ம் வகுப்பு படித்துவிட்டு, கூலி வேலைக்கு சென்று வந்தார். அங்கு வேலைக்கு வந்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்த மவுலீஸ்வரன், கடந்த பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி
வந்தார்.

சில நாட்களுக்கு முன், சிறுமி கர்ப்பமானதால், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். சிறுமிக்கு, 17 வயது என்பதால், மருத்துவர்கள், அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரித்த போலீசார், சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பினர். தொடர்ந்து மவுலீஸ்வரன் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்தனர். ஆனால் மனைவியை பிரிந்த துக்கத்தில் இருந்த மவுலீஸ்வரன், நேற்று அவரது சேலையை எடுத்து, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement