இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் செய்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு

39

புதுடில்லி: "இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் பயன்படுத்தப்படுகிறது. யாராலும் முடியவில்லை ஆனால் முயற்சி மேற்கொண்டனர்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், அமித்ஷா பேசியதாவது: எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை; ஆனால் நம் மொழியை போற்ற வேண்டும். நம் மொழியை பேச வேண்டும். நம் மொழியில் சிந்திக்க வேண்டும். ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்பதை நான் மனதார நம்புகிறேன்.

நண்பன்



ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன், மேலும் ஹிந்தி மற்றும் இந்திய மொழிகள் ஒன்றாக இணைந்து இலக்கை அடைய முடியும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவைப் பிரிக்க மொழி அரசியல் பயன்படுத்தப்பட்டது. அவர்களால் அதை உடைக்க முடியவில்லை. ஆனால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறந்த இந்தியா



இந்தியாவை ஒன்றிணைக்க நமது மொழிகள் சக்தி வாய்ந்ததாக மாறுவதை நாங்கள் உறுதி செய்வோம். 2047ல் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்குவோம். மத்திய அரசில் மட்டுமல்ல, மாநில அரசிலும், அரசுப் பணிகளில் இந்திய மொழிகளை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். இதற்காக, நாங்கள் மாநிலங்களைத் தொடர்புகொண்டு, அதற்கான நடவடிக்கையை எடுக்க முயற்சி செய்வோம்.

13 மொழிகளில் தேர்வு



நீட், க்யூட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. முன்னதாக, CAPF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நாங்கள் அதை மாற்றினோம். 13 மொழிகளில் தேர்வை எழுத அனுமதித்தோம். இன்று 95% பேர் தங்கள் தாய்மொழியில் கான்ஸ்டபிள் தேர்வை எழுதுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.
இது வரும் நாட்களில் இந்திய மொழிகளின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

பிரகாசம்



நாட்டைப் பொறுத்தவரை, மொழி என்பது வெறும் தொடர்பு கொள்ள பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும். ஒருவர் தனது மொழியில் பெருமை கொள்ளும் வரை, தனது மொழியின் சிறப்பை வெளிப்படுத்திக் கொள்ளாத வரை, அடிமைத்தனத்தின் மனநிலையிலிருந்து நாம் விடுபட முடியாது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement