என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!

Latest Tamil News
வறுமை, பிழைப்பு பிரச்சனை, மற்றும் தற்காலிக வாழ்விடம் இன்றி தவிக்கும் பலருக்கும், இரவு நேரத்தில் பாதுகாப்பாகத் தங்க துாங்க ஒரு சிறிய இடமே பெரும் நிம்மதியாகிறது. இந்த பின்னணியில், புதுதில்லி நகர சீரமைப்பு விடுதி வாரியம் (DUSIB) செயல்படுத்தும் இரவு தங்குமிடங்கள், நகரின் பல பகுதிகளில் மனத்தளர்ச்சி அடைந்த மக்களுக்கு ஒளியாக உள்ளது.

அந்த வகையில், சரை காலே கான் பகுதியில் செயல்பட்டு வரும் இரவு தங்குமிடம், சாலையோரங்களில் தங்கி வரும் பெண்கள், முதியவர்கள், பிழைப்புக்காக நகரம் தேடிவந்தவர்கள் போன்றவர்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான, இலவச தங்குமிடமாக திகழ்கிறது.
Latest Tamil News
இலவச படுக்கை மற்றும் படுக்கையறை,தூய்மையான குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள்,தண்ணீர் மற்றும் அடிப்படை மருத்துவ உதவி,சுற்றுலா அல்லது வேலை தேடி வருவோருக்கும் தற்காலிக தங்கும் இடம்,இதற்கு பயனாளர்களாக இருப்பவர்கள்,நகரத்தில் ஒரு இடத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமல், குறைந்தபட்சமாக ஒரு இரவாவது தூங்க முடிகிறது.

சிலருக்கு இது வாழ்க்கையின் ஒரு இடைநிலை, வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை. சிலருக்கு, சாலையோர வாழ்வின் வலிகளை ஓரளவு மறக்கும் இடம்.
Latest Tamil News
DUSIB நிர்வாகம், தில்லியின் பல பகுதிகளில் ஏற்கனவே இது போன்ற இரவு தங்குமிடங்களை நிர்வகிக்கிறது.சிலைமான் ரோட், யமுனா பங்க், காச்மீரி கேட், சரை காலே கான் போன்ற பகுதிகளில் இந்த திட்டங்கள் நகரத்தை மனிதநேயம் மிக்க நகரமாக மாற்றும் நோக்கில் செயல்படுகின்றன.அதிகரிக்கும் நகர்மயமாக்கல், அகதிகள், வேலை தேடிப் புறநகரிலிருந்து வரும் பொதுமக்கள் ஆகியோருக்கான தேவையை கருத்தில் கொண்டால், இத்தகைய தங்குமிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை.

புதிய வீடு இல்லை என்றாலும், ஒரு இரவுக்கு நிம்மதி வேண்டும். சாப்பாடு இல்லை என்றாலும் ஒரு படுக்கை வேண்டுமென்பது மனிதத்தின் அடிப்படை உரிமை. சரை காலே கான் இரவு தங்குமிடம், அந்த உரிமையை குறைந்தபட்சமாகக் கொண்டுவரும் சமூக நலத்தின் உணர்வுச் சின்னமாக உள்ளது.

-எல்.முருகராஜ்.

Advertisement