கேரள வனப்பகுதியில் சிக்கித் தவித்த நிலம்பூர் புதிய எம்.எல்.ஏ.,

மலப்புரம்: கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆர்யதன் சவுகத், வானயம்புழா வனப்பகுதியில் 3 மணி நேரம் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட ஆர்யதன் சவுகத், சமீபத்திய நிலம்பூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார், மேலும் நாளை கேரள சட்டமன்ற உறுப்பினராக முறையாகப் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் இன்று காட்டு யானை தாக்கியதில் கொல்லப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த பில்லியின் உடலை மீட்டு வரும் போது, எம்.எல்.ஏ.,வையும், அதிகாரிகள் குழுவையும் ஏற்றிச்சென்ற படகின் இயந்திரம் பழுதானதால் 3 மணி நேரம் சிக்கித்தவித்த சம்பவம் நடந்தது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

முண்டேரி வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த பில்லியின் உடலை மீட்டு மஞ்சேரி மருத்துவக் கல்லுாரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினருடன், படகு மூலம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சாலியார் ஆற்றின் குறுக்கே வாணியம்புழாவுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
இந்த பயணத்தின் போது தொடர்ந்து பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது படகின் இன்ஜின் பழுதாகியது, பாதுகாப்பு அதிகாரிகள் ஆற்றை கடந்து சென்று அந்த இன்ஜினை சரிசெய்தனர்.
அதன் பிறகு வனப்பகுதி சென்று, அங்கு 3 மணி நேரம் சிக்கி தவித்த எம்.எல்.ஏ., உள்ளிட்டோரை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement