ஈரானிலிருந்து 3,400 இந்தியர்கள் மீட்பு: வெளியுறவு அமைச்சகம் தகவல்

2

புதுடில்லி: "ஆபரேஷன் சிந்து"வின் கீழ் ஈரானில் இருந்து இதுவரை 3,400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே 2 வாரமாக நடந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்க, "ஆபரேஷன் சிந்து" திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ' ஆபரேஷன் சிந்து ' குறித்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 18 அன்று நாங்கள் "ஆபரேஷன் சிந்து"வைத் தொடங்கினோம். ஈரானில் சுமார் 10,000, இஸ்ரேலில் சுமார் 40,000 இந்தியர்கள் உள்ளனர்.
ஈரானில் இருந்து, இதுவரை 3,426 இந்தியர்கள், 9 நேபாள நாட்டவர்கள் மற்றும் சில இலங்கை நாட்டினரையும் மீட்டுள்ளோம். ஒரு இந்தியரின் மனைவியான ஒரு ஈரானைச் சேர்ந்த பெண்ணும் மீட்கப்பட்டு உள்ளார்.

ஈரானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 14 விமானங்களை பயன்படுத்தி உள்ளோம். இந்த விமானங்கள் ஈரானின் மஷாத், ஆர்மீனியாவின் ஏரவண் மற்றும் துர்க்மெனிஸ்தானில் உள்ள அஷ்காபாத் ஆகிய இடங்களிருந்து இந்தியா வந்துள்ளது. ஆர்மீனியாவிலிருந்து இன்னுமொரு விமானம் இந்தியாவிற்கு புறப்பட்டு உள்ளது.இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Advertisement