13 மொழிகளில் மத்திய ஆயுதக் காவல்படை தேர்வு: நயினார் நாகேந்திரன் பெருமிதம்

சென்னை: 13 மொழிகளில் மத்திய ஆயுதக் காவல்படை தேர்வு எழுதுவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் 95 சதவீதம் பேர் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதி பயனடைவர் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத்திய ஆயுதக் காவல்படை(CAPF) தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளில் மட்டுமே எழுத முடியும் என்ற நிலை இருந்தது.

அன்று, பல அமைச்சர்களை மத்தியில் வைத்திருந்த திமுக அரசு, எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியில் மத்திய அரசுத் தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கவில்லை.

ஆனால் தற்போது, நமது பிரதமர் மோடி, தலைமையிலான மத்திய அரசின் கீழ், பல மத்திய அரசுத் தேர்வுகளை 13 மொழிகளில் எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 95% பேர் அவரவர் தாய்மொழிகளில் தேர்வுகளை எழுதுகின்றனர் என்பது இமாலய சாதனை.

நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவர்களும் மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான கதவுகள் இதனால் திறக்கும்.

இத்தகைய செயல்களால், யார் உண்மையான மொழிக்காவலர்கள், யார் மொழியை வைத்து அரசியல் மட்டும் செய்பவர்கள் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதை என்னால் நிச்சயமாக உணரமுடிகிறது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement