அமெரிக்காவின் முகத்தில் அறைந்தது ஈரான்: சொல்கிறார் கமேனி

1

டெஹ்ரான்: '' அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்,'' என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.


இது தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு டிவி மூலம் அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது: நகர்ப்புறம் மற்றும் ராணுவ இடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் பல முனை பாதுகாப்பையும் ஈரான் ராணுவப்படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் அந்நாடு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இதனால், டிரம்ப் நடிக்க வேண்டியிருந்தது.


எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக நடக்கும் எந்த அத்துமீறலுக்கும், பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அமெரிக்க தளத்தை தாக்கியது பெரிய விஷயம். எதிர்காலத்தில் அத்துமீறல்கள் தொடர்ந்தால், அதன் மீதான தாக்குதல் தொடரும்.


நமது எதிரிகள், ஏவுகணைகள் அல்லது அணுசக்தி திட்டங்கள் என தாக்குதலுக்கு காரணம் கூறினர். ஆனால், நாம் சரண் அடைவோம் என்பதே அவர்களின் உண்மையான நோக்கமாகும்.


டிரம்ப் பேசும்போது, ஈரான் சரணடைய வேண்டும் எனச் சொல்கிறார். ஈரான் சரணடைந்தால் அமெரிக்கா திருப்திப்படும் என்ற உண்மையை டிரம்ப் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், சரணடைவது எப்போதும் நடக்காது. நமது தேசம் மிகவும் சக்திவாய்ந்தது.


அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை உணர்ந்ததால் தான் அமெரிக்க இந்த போரில் தலையிட்டது. ஈரானின் கடுமையான தாக்குதல் காரணமாக, கடுமையாக நசுக்கப்பட்டதால், இஸ்ரேல் சரியும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு கமேனி கூறினார்.

Advertisement