திருப்பூரில் ஜூலை 1ல் ம.தி.மு.க., கூட்டம்

திருப்பூர்; ஈரோட்டில், 29 ஆண்டுகளுக்கு பின், ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 22ம் தேதி நடந்தது. தி.மு.க., கூட்டணியில் தொடர்வதாக பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகக்குழு கூட்டம், ஜூன், 29ல் சென்னையில் நடக்கிறது.

இந்நிலையில், ஜூலை, 1ல் கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூரில் நடைபெற உள்ளது. கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தி.மு.க., கூட்டணியில் தொடர்வது, மண்டலத்தில் கட்சியின் பலம் என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் வைகோ, துரைவைகோ இருவரும் பேச உள்ளனர். பலம் வாய்ந்த தொகுதிகள் எவையோ, அவற்றை தி.மு.க.,விடம் கேட்டுப்பெறுவதற்கான அச்சாரமாகவும் இந்தக்கூட்டம் அமைய உள்ளது.

வைகோவின் வலது கரமாக இருந்தவர் திருப்பூர் துரைசாமி; கட்சியின் அவைத்தலைவராக இருந்த துரைசாமி, துரை வைகோ கட்சிக்குள் வந்த பின், கட்சியின் போக்கு சரியில்லை எனக்கூறி, வைகோவுக்கு கடிதம் எழுதினார். கட்சிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததாக கூறி, அவைத்தலைவர் பதவியில் இருந்து, 2023ல் துரைசாமி நீக்கப்பட்டார்.

அவரது நீக்கத்துக்கு பின், வைகோ, துரை வைகோ இணைந்து, கோவை மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தை, திருப்பூரில் நடத்துவது இதுவே முதன்முறை.

Advertisement