துாய்மைப்பணியாளருக்கு மாத குறைதீர் கூட்டம் அரசிடம் நலவாரியம் கேட்கிறது

மதுரை:'துாய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ஒருநாள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்' என நலவாரிய தலைவர் ஆறுச்சாமி வேண்டுகோள் வைத்தார்.

மதுரையில் துாய்மைப் பணியாளர் நலவாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார்.

நலவாரிய துணைத் தலைவர் கனிமொழி, செயல் அலுவலர் கோவிந்தராஜ், உறுப்பினர்கள் மகாலிங்கம், தங்கவேலு, தாட்கோ மாவட்ட மேலாளர் பாலசுப்ரமணியன், உதவி மேலாளர்கள் சாமிவேல், கிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

நலவாரிய தலைவர் ஆறுச்சாமி பேசியதாவது: துாய்மைப் பணியாளர் நலவாரியத்தை 2007 ல் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். 2022ல் முதல்வர் ஸ்டாலின் இவ்வாரியத்துக்கு ரூ. 20 கோடி ஒதுக்கினார்.

குறைதீர் நாள் கூட்டம் போன்று, துாய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ஒருநாள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். ஆரம்பத்தில் இந்த வாரியத்தில் 20 ஆயிரம் பேர் உறுப்பினர். இன்று 3 லட்சம் பேர் உள்ளனர். இதில் தனியார் நிறுவனங்கள், வீடுகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளரும் சேரலாம்.

இவ்வகையில் 10 லட்சம் பேரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கையால் பணி செய்வதை தவிர்த்து இயந்திரங்களைக் கொண்டு செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கலெக்டர் பேசுகையில், 'துாய்மைப் பணியாளர்களுக்கு நலவாரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தாட்கோ அலுவலர்கள் முகாம் நடத்த வேண்டும். இவர்களுக்கென 15 நலத்திட்டங்கள் மூலம், ரூ. ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை உதவிகள் வழங்கப்படுகிறது' என்றார். தொடர்ந்து, 'துாய்மைப் பணியாளர்கள் வழங்கும் கோரிக்கைகளுக்கு ஏற்ப குறைதீர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வோம்' என்றார்.

Advertisement