'கோகைன்' வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது சர்வதேச போதை பொருள் கடத்தல் புள்ளிக்கும் சிறை

சென்னை:'கோகைன்' போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், நண்பர்களுக்கும் கொடுத்த நடிகர் கிருஷ்ணாவும், அவருக்கு கோகைன் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த, அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி பிரசாத், 33, நடிகர், நடிகையருக்கு 'கோகைன்' சப்ளை செய்துள்ளார்; நட்சத்திர ேஹாட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் கோகைன் விருந்து நடத்தி, அவர்களை போதையில் மிதக்க விட்டுள்ளார்.
அவருடன் நடிகர்கள் ஸ்ரீகாந்த், 46, கிருஷ்ணா, 47, ஆகியோருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களையும் கோகைன் பழக்கத்திற்கு அடிமையாக்கிய பிரசாத், தன் கூட்டாளிகளான, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த, கானா நாட்டைச் சேர்ந்த ஜான், 38, சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார், 38, ஆகியோரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதன் பின்னர், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர், அவர்களிடம் நேரடியாக பேசி, கோகைன் வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இதையடுத்து, பெங்களூரு மற்றும் ஓசூரில் பதுங்கி இருந்த பிரதீப்குமார், ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரிடம் பிரதீப்குமார் அளித்த வாக்குமூலத்தில், 'நான் நைஜீரியாவைச் சேர்ந்த ஜீரிக் என்பவரிடம் பேசி, பெங்களூருக்கு கோகைன் வரவழைத்து, என் நெருங்கிய நண்பர்களான சென்னையைச் சேர்ந்த பிரசாத், கெவின், லிங்கேஸ்வரன், யோகராஜ், யூசுப் ஆகியோர் வாயிலாக விற்று வந்தேன்.
'மற்ற நண்பர்களை காட்டிலும், கெவின் என்னிடம் அதிகமாக கோகைன் வாங்குவார். ஒரு கிராம் கோகைனுக்கு, 4,000 ரூபாய் லாபம் வைத்து விற்பேன். கெவின் மற்றும் பிரசாத் ஆகியோர் கோகைன் வாங்கி, நடிகர், நடிகையர், இசையமைப்பாளர் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும், தொழில் அதிபர்களுக்கும் விற்று வந்தனர்' என, கூறியுள்ளார்.
இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல, கேரளாவில் பதுங்கி இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து வந்து, சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில், 18 மணி நேரம் போலீசார் விசாரித்தனர்.
பிரசாத் மற்றும் பிரதீப்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கிருஷ்ணாவிடம், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அப்போது, ' பிரசாத்தும் பிரதீப் குமாரும் யார் என்றே எனக்கு தெரியாது' என, கூறியுள்ளார். இதனால், ஸ்ரீகாந்த், பிரசாத், பிரதீப்குமார் ஆகியோருடன், கிருஷ்ணா இருக்கும் புகைப்படத்தை காட்டியுள்ளனர்.
அதன் பின்னர், 'வெப் சீரியல்' தொடர்பாக பிரசாத்தை சந்தித்ததை ஒப்புக்கொண்டார். 'எதற்காக, பிரசாத் வங்கி கணக்கிற்கு, 20 லட்சம் ரூபாய் அனுப்பினீர்கள்' என, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தன் நண்பரிடம் கடன் வாங்கி கொடுத்ததாக பதிலளித்துள்ளார்.
'பிரதீப்குமாரிடம் எத்தனை கிலோ கோகைன் வாங்கினீர்கள்' என கேட்டதும், கிருஷ்ணாவுக்கு வியர்த்து கொட்ட துவங்கியது. 'பிரதீப்குமாருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு ஸ்ரீகாந்த் தான் பழக்கம். நான் எதற்காக கோகைன் வாங்க போகிறேன். என்னிடம் போதை பொருள் விற்றதாக பிரதீப்குமார் பொய் சொல்லி உள்ளார். எனக்கு இரைப்பையில் பிரச்னை உள்ளது. இதய துடிப்பும் சீராக இல்லை. அதற்கு மருந்து உட்கொண்டு வருகிறேன். நான் கோகைன் பயன்படுத்தி இருந்தால், இந்நேரம் உயிருடனே இருந்திருக்க மாட்டேன்' என, சந்தேகம் வராதபடி பதில் அளித்துள்ளார்.
அவர் நடிக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட போலீசார், கிருஷ்ணாவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர். அதில், போதைப் பொருள் பயன்படுத்தப்படவில்லை என, தெரியவந்தது. சென்னை பெசன்ட் நகர் கலாேஷத்ரா காலனியில் உள்ள அவரின் வீட்டிலும் சோதனை நடத்தினர்; அங்கேயும் போதை பொருள் சிக்கவில்லை.
இதனால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சைபர் கிரைம் போலீசார் வாயிலாக, 2020ல் இருந்து கிருஷ்ணாவின் மொபைல் போனில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகள், 'வாட்ஸாப் சாட்டிங்' உள்ளிட்ட தகவல்களை மீட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தான், கிருஷ்ணா, பிரசாத், பிரதீப்குமார், ஸ்ரீகாந்த், கெவின் உள்ளிட்டோர், வாட்ஸாப் குழு துவங்கி, அதன் வாயிலாக, கோகைன் வாங்கி, விற்று வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு மட்டுமே புரியும்படியான, ரகசிய வார்த்தைகளை கிருஷ்ணா பயன்படுத்தி இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, சென்னை, ஆற்காடு சாலை, விருகம்பாக்கத்தில் உள்ள ஜெஸ்வீர் என்ற கெவின், 37, என்பவரின் வீட்டில் நேற்று போலீசார் சோதனை செய்தனர். அங்கு, 1.50 கிராம் கோகைன், 10.30 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 2.75 கிராம் எம்.டி.எம்.ஏ., எனப்படும் போதை பொருள் மற்றும் 70 கிராம் கஞ்சா, சிறிய அளவிலான எடை இயந்திரம், மொபைல் போன், 45,200 ரூபாய், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். கெவினையும் பிடித்து வந்து, கிருஷ்ணாவுடன் அமர வைத்து விசாரித்தனர்.
அப்போது, கெவினிடம் இருந்து கிருஷ்ணா கோகைன் வாங்கி பயன்படுத்தியதுடன், திரையுலக நண்பர்கள் மற்றும் தோழியருக்கு கொடுத்து வந்ததையும், போலீசார் உறுதி செய்தனர். சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் கெவின் என்பதும், இதற்காக வாட்ஸாப் குழு துவங்கி, கோகைன் உட்கொள்ளும் இடம், நேரம் குறித்து தகவல்களை பரிமாறியதையும் போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணா, கெவின் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூலை 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்
-
ஸ்டாலினை போல என் மகன் இல்லையே: ராமதாஸ் ஆதங்கம்
-
தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி
-
காங்கிரசாகவே மாறும் தமிழக பா.ஜ.,: 12 துணை தலைவர்கள் நியமிக்க முடிவு
-
எடை இயந்திரம் - கைரேகை கருவி இணைப்பு அமல்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தல்
-
அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் பங்களிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்ட தீர்மானம்
-
சில வரி செய்திகள்: