வாழ்க்கை இனிக்கல: திறக்காத சர்க்கரை ஆலையால் விவசாயிகளுக்கு....: தனியாருக்காக 'அடக்கப்பட்ட' அலங்காநல்லுார்

நான்காண்டுகளுக்கு முன் அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை கரும்பு ஆலை திறக்கப்படும் என அரசு தெரிவித்தது. இந்த ஆலைக்குட்பட்ட பகுதியில் மட்டும் 15ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. மேலுாரில் 10 ஆயிரம் ஏக்கர், திருமங்கலத்தில் 250 ஏக்கர், செக்கானுாரணி, சோழவந்தான், நிலக்கோட்டை, கன்னிவாடியில் சிறிதளவும், அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் தலா 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆய்வு கமிட்டி நியமிக்கப்பட்டு அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர். ஆலையை நிர்வகித்து இயந்திரங்களை பழுதுபார்க்க ரூ.14 கோடி, ஊழியர்களின் சம்பள பாக்கி ரூ.13 கோடி என மொத்தம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கலாம் என பரிந்துரைத்தனர். அத்தொகையை இதுவரை அரசு ஒதுக்கவில்லை.

'மதுரையில் உள்ள கரும்புகள் அலங்காநல்லுார் ஆலைக்கு பதிவு செய்யப்படாமல் தனியார் ஆலைகளுக்கு பதிவு செய்யப்பட்டன.

நாங்கள் போராட்டம் நடத்தியதால் தஞ்சை அரசு சர்க்கரை ஆலை அதிகாரிகள் திருமங்கலம் வந்து திருமால் கிராம விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்' என்கிறார் தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனிசாமி.

அவர் கூறியதாவது: மூன்று நாட்களுக்கு முன் திருமால் கிராம கரும்பு விவசாயிகளுடன் தஞ்சை அண்ணா சர்க்கரை ஆலையில் பதியச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் 80 விவசாயிகள் பங்கேற்ற போது, 'அலங்காநல்லுார் ஆலைக்கு கரும்புகளை பதிவு செய்துள்ளோம்' என்று தெரிவித்தனர்.

ஒருவேளை இங்கு ஆலை திறக்காவிட்டால் தஞ்சை ஆலைக்கு அனுப்புவதற்காக பதிவு செய்யுங்கள் என்றதும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலைக்கு கரும்பு வழங்க பதிவு செய்தனர். இப்போது பதிந்தால் தான் அடுத்த 5 மாதங்களுக்குள் கரும்பை அறுவடை செய்ய முடியும். இயந்திர பராமரிப்புக்கு மட்டும் முதல்கட்டமாக ரூ.14 கோடி ஒதுக்கினாலே ஆலையை திறக்கலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்து 40 டன், அதிகபட்சமாக 60 டன் கிடைக்கும்.

அலங்காநல்லுார் ஆலை அரவைக்கு ஒன்றரை லட்சம் டன் கரும்புகளே போதும். இங்கே தேவைக்கு அதிகமாகவே கரும்புகள் இருந்தும், தனியார் ஆலைகளுக்கு சாதகமாக செயல்படுவதற்காக ஆலையை திறக்காமல் அரசும் அதிகாரிகளும் வேண்டுமென்றே எங்களை ஏமாற்றுகின்றனர்.

தமிழக அரசு இப்போது ஆலையை திறக்காவிட்டால் சென்னையில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Advertisement