பெயர் பலகையை மறைக்கும் மரங்கள் திசை மாறும் வாகன ஓட்டிகள்

அய்யங்கார்குளம்,:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, அய்யங்கார்குளம் கூட்ரோடு அருகில், அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயர் பலகையை மரக்கிளை மறைப்பதால், வாகன ஓட்டிகள் திசைமாறி செல்கின்றனர்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, அய்யங்கார்குளம் கூட்ரோடு அருகில், வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், கலவை உள்ளிட்ட ஊர்களுக்கு எந்த திசையில் திரும்ப வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை சார்பில், வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழிகாட்டி பெயர் பலகையை, சாலையோரம் உள்ள ஒரு புளிய மரத்தின் கிளைகள் மறைத்துள்ளன.

இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து இச்சாலையில் செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள், தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு செல்லாமல், திசை மாறி வேறு ஊருக்கு செல்கின்றனர்.

இதனால், நெடுஞ்சாலைத் துறையினர், வழிகாட்டி பெயர் பலகை அமைத்ததின் நோக்கமே வீணாகி வருகிறது.

எனவே, வழிகாட்டி பலகையை மறைக்கும் சாலையோரம் உள்ள புளியமரத்தின் கிளையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement