கரும்பு விலையை உயர்த்தி வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கரும்பு உற்பத்தியை அதிகரிக்க, கரும்பு விலையை உயர்த்தி வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. இதில், விவசாயிகள் பேசியதாவது:
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வரத்து குறைவாக உள்ளது. இதனால், கரும்பு சாகுபடியை அதிகரிக்க, கரும்பு ஒரு டன்னுக்கு 5,000 ரூபாய் அரசு வழங்க, பரிந்துரை செய்ய வேண்டும்.
படாளம் - பூதுார் வரை, நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மாடுகளால் விபத்து அதிகரிக்கிறது. சாலையில் உள்ள மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். எல்.என்.புரத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். பால் விலை உயர்த்தி வழங்க வேண்டும்.
விவசாயிகள் மண் பரிசோதனை செய்யும் போது, உடனுக்குடன் முடிவுகள் வழங்கி, மண் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழுப்பேடு - சூணாம்பேடு சாலையில், கல் குவாரிகளில் இருந்து, கல் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.
அதன் பின், விவசாயிகள் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, வேளாண்மை துறை சார்பில், ஏழு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் மின்சாரம் பாய்ந்து 10 மாடுகள் இறந்ததற்கு, மின்வாரியம் இழப்பீட்டு தொகை தலா 25,000 ரூபாய் வீதம் மொத்தம் 2.5 லட்சம் ரூபாயை, கலெக்டர் சினேகா வழங்கினார்.