நல்லாமுத்து குளத்தை சீரமைக்க தேவராஜபுரம் கிராமத்தினர் கோரிக்கை

செய்யூர்:தேவராஜபுரத்தில், துர்நாற்றம் வீசும் நல்லாமுத்து குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் அருகே தேவராஜபுரம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்பு பகுதியில், நல்லாமுத்து குளம் உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன், இந்த கிராம மக்கள், நல்லாமுத்து குளத்தின் நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். அதன் பின் குளிப்பதற்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் பயன்படுத்தினர்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்த குளம் முறையான பராமரிப்பு இல்லாமல், குளக்கரையில் அப்பகுதி மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர்.

மேலும், குளத்தில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குளத்து நீரை மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நல்லாமுத்து குளத்தை துார்வாரி சீரமைத்து, குளக்கரையைச் சுற்றி நடைபாதை அமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement