சிமெண்ட் சாலை சேதம் கிராம மக்கள் அவதி

விருத்தாசலம் : எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சி எ.வடக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் நலன்கருதி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

தற்போது சாலை முற்றிலும் உள்வாங்கியுள்ளது. இதனால், மழைக்காலங்களில், சாலை நெடுகிலும் மழைநீர் குளம்போல் தேங்கி, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், கிராம மக்கள் சாலையை பயன்படுத்த மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும், சிலர் சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைவது தொடர்கதையாக உள்ளது.

சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீரமைக்க கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கிராம மக்கள் நலன் கருதி, சிமெண்ட் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement