நினைத்தது நடக்கவில்லை... * பொறுப்பேற்கும் பிரசித் கிருஷ்ணா

பர்மிங்ஹாம்: ''லீட்ஸ் டெஸ்டில் நினைத்தது போல் துல்லியமாக பந்துவீச முடியவில்லை. மோசமான செயல்பாட்டுக்கு பொறுப்பேற்கிறேன்,'' என பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார்.
லீட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய பேட்டர்கள் அசத்தினர். பவுலர்கள் ஏமாற்றியதால் தோல்வி அடைய நேரிட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இரு இன்னிங்சிலும் சேர்த்து 35 ஓவரில் 210 ரன்னை வாரி வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியது:
லீட்ஸ் டெஸ்ட் முதல் இன்னிங்சில் நான் எதிர்பார்த்ததை போல சரியான அளவில் பந்து வீச முடியவில்லை. ஒவ்வொரு முறையும் 'மெய்டனாக' வீச வேண்டும், எதிரணிக்கு நெருக்கடி தர வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் நினைத்தபடி நடக்கவில்லை. சில நேரங்களில் பவுன்சர் வீசினேன். அதிலும் ரன் சென்று விட்டது.
இரண்டாவது இன்னிங்சில் ஆடுகளம் சற்று மந்தமானது. இதனால் சற்று மாற்றம் செய்து பவுலிங் செய்தேன். சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.
கைகொடுக்காத வானிலை
மழை, காற்றின் வேகமும் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகித்தன. வேகமாக ஓடிவந்து பந்துவீச முயற்சித்த போது, காற்றின் வேகமும் சேர்வதால், எந்த வேகத்தில் பவுலிங் செய்வது என குழப்பம் ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் காரணங்கள் சொல்லக் கூடாது. மோசமான செயல்பாட்டுக்கு நானே முழு பொறுப்பேற்கிறேன். அடுத்த முறை சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement