தமிழக ஆட்சியில் ராம ராஜ்ஜியம் இல்லை

நாகர்கோவில்:''தமிழக ஆட்சியில் ஊறுகாய் அளவுக்கு கூட ராம ராஜ்ஜியம் இல்லை,'' என, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வைகுண்டபுரத்தில் ராமர் கோயில் கும்பாபிேஷகத்தையொட்டி நடந்த சமய மாநாட்டில் தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

அவர் பேசியதாவது: உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக ஆட்சி நடத்த வேண்டும் என காட்டியவர் ராமர். இதனால் தான் ராம ராஜ்ஜியம் என அழைக்கிறோம். ராமர் மனிதனாக இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுள்ளார். மக்களாட்சியில் இருக்கும் போது மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம். அவரது தந்தை கொடுக்கிறேன் என்று கூறிய பதவியை கொடுக்காத போது எப்படி நடந்து கொண்டார் என பார்க்க வேண்டும்.

பகலில் சென்றால் மக்கள் தடுப்பார்கள் என்பதால் இரவில் காட்டுக்குச் சென்றவர் ராமர். எதிரியாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டார், ராமரை போல் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு அவரது பெயரை வைக்கிறோம்.

தமிழகத்தில் இருக்கும் ஆட்சியில் ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை. குடும்பத்தில் எப்படி ராமர் இருந்தார் என்பதையும், இன்று ஆட்சியில் குடும்பம் எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்னை வந்தால் மன்னர் துடிப்பார். ஆனால் தற்போது மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்களா என்றால் கிடையாது.

அனைவரும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். எந்த கட்சி, எப்படிப்பட்ட தலைவர், என்ன மாற்றத்தை கொடுக்கப்போகிறார் என சிந்திக்க வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு நமக்கானதல்ல குழந்தைகளுக்கானது. எப்படிப்பட்ட மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக ஓட்டு போட உள்ளீர்கள். சனாதன தர்மத்தை பேணி காக்க வேண்டும் என்று நினைத்தால் வாக்களிக்க கூடியவர்களாகிய நீங்கள் யார் சனாதன தர்மத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்று வாக்களிக்கும் ஒரு முறை யோசித்துப் பார்க்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பேசும்போது கடவுளின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு கட்சி அரசியல் செய்கிறது என்றார். விநாயகர் சிலையை உடைத்தது யார். ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தகூடாது என்ற போது ராமர் என்ன இன்ஜினியரா என கேட்டது யார். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசிய போது கைதட்டி பார்த்துக் கொண்டிருந்தது யார். டெங்கு கொசுவை ஒழிப்பது போன்று சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறியது நாமா அல்லது முதல்வர் மகனா.கம்பராமாயணம், மகாபாரதத்தை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கந்தசஷ்டி தினத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு மகாபாரதத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்பில் நீட்பயிற்சி, ஆறாம் வகுப்பில் சிவில் சர்வீஸ் பயிற்சி கொடுக்கிறோம். இந்த வயதில் அந்த குழந்தைகளுக்கு அவற்றைப் பற்றி எல்லாம் தெரியுமா. வியர்வை, ரத்தத்தை கொடுத்து சனாதனத்தை காப்பாற்றியவர்கள் இம்மாவட்டத்தில் உள்ளனர். மதமாற்றம் குறித்து முழுமையாக அறிந்தவர்கள் இங்கு உள்ளனர். எந்த மதமும் நமக்கு போட்டி கிடையாது. அவரவர் மதம் அவரவர்களுக்கு பெரியது. உலகில் மக்கள் தொகையில் ஹிந்து மதம் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கிறிஸ்தவ முஸ்லிம் மதம் வேகமாக வளர்ந்துள்ளது என்றார்.

பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜ., மாவட்ட தலைவர் கோபகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement