போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்படுத்தி தி.மு.க., - எம்.பி., மகன் தில்லுமுல்லு,
தஞ்சை: தி.மு.க., - எம்.பி.,யின் மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில், போலி ஐ.எஸ்.ஐ., லேபிள்கள் பயன்படுத்தப்பட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பம்பபடையூரைச் சேர்ந்தவர் ராஜ்யசபா தி.மு.க., -- எம்.பி., கல்யாணசுந்தரம்.
இவரது மகன் முத்துசெல்வம். இவர், 'ஹோலி டிராப் பேக்கேஜ்டு' என்ற குடிநீர் நிறுவனத்தை
பம்பபடையூரில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்திய தரநிலைகள் பணிகமான பி.எஸ்.ஐ., மதுரை கிளை அலுவலகத்திற்கு, இந்நிறுவனத்தில் போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை குடிநீர் பாட்டில்களில் பயன்படுத்துவதாக புகார் சென்றது. இந்திய தரநிலைகள் பணிகத்தின் விஞ்ஞானி மற்றும் தலைவரான
தயானந்த் தலைமையிலான குழுவினர், ஜூன் 25ல் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பிரைன் அக்வா, ஆக்டிவ் அக்வா, வின்வே என வெவ்வேறு பிராண்ட் பெயர்களில், போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு கொள்ளளவு கொண்ட, 17,534 குடிநீர் பாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும், போலி ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய 3.8 லட்சம் லேபிள்களையும் கைப்பற்றி, 'நோட்டீஸ்' வழங்கினர். பி.எஸ்.ஐ., அதிகாரிகள் கூறுகையில், 'ஆய்வில் போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை பயன்பாடு தெரியவந்தது. இது குறித்து உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பியுள்ளோம்.
'குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறோம். விசாரணைக்கு பிறகு, இந்திய தரநிலைகள் சட்டத்தின் கீழ், குற்றவியல் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
இது தொடர்பாக முத்து
செல்வத்தை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் போனை எடுக்கவில்லை.