ஆட்சியில் பா.ஜ., பங்கேற்கும் அமித் ஷா அறிவிப்பு பின்னணி

30


சென்னை: சட்டசபை தேர்தலுக்கு பிறகும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே, 'தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பா.ஜ., அங்கம் வகிக்கும்' என, அமித் ஷா கூறியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அமித் ஷா அறிவிப்பின் பின்னணி குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழகத்தில், கடந்த 1967ல் ஆட்சிக்கு வந்தது முதல், தி.மு.க., அனைத்து சட்டசபை, லோக்சபா தேர்தல்களிலும், கூட்டணி அமைத்துதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வெற்றிபெற்ற நிலையில், தனி மெஜாரிட்டி கிடைத்தது என்பதால், தி.மு.க., அரசின் அமைச்சரவையில் அக்கட்சியினர் மட்டும் இடம்பெற்று வருகின்றனர்.


தேர்தல் முடிந்ததும், அக்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் வகையில், வெற்றிக்கு பாடுபட்ட, கூட்டணி கட்சிகளை கண்டு கொள்வதில்லை. அதுமட்டுமல்ல, 2006 தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க.,வுக்கு, தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அளவுக்கு மெஜாரிட்டி இல்லை. இருந்தும், கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு, தி.மு.க., ஆட்சி அமைத்தது. ஆனாலும், கூட்டணி கட்சியினரை தி.மு.க., தலைமை கண்டு கொள்ளவில்லை.


அதனால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கோஷம் தற்போது வலுத்துள்ளது. தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க.,வை எதிர்கொள்ள, பா.ஜ., - அ.தி.மு.க., அணியில், மேலும் பல கட்சிகளை சேர்த்து, பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில், அமித் ஷா ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு பின்பும், அ.தி.மு.க., உடனான கூட்டணி தொடர வேண்டும் என்பதே, அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின் விருப்பமாக உள்ளது.

இதற்காகவே, அமித் ஷா அளித்த பேட்டியில், 'சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் நிச்சயமாக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில், பா.ஜ.,வும் ஒரு அங்கமாக இருக்கும்' என, தெரிவித்தார்.



அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிக்கும் நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த ஓரிருவருக்கு அமைச்சரவையில், அ.தி.மு.க., வாய்ப்பு கொடுத்தால், மத்திய அரசிடம் இருந்து, அதிக அளவிலான திட்டங்கள், நிதியை பெற்று, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியும். உள்ளாட்சி, லோக்சபா என, தொடர்ந்து வரும் தேர்தல்களிலும், இரு கட்சிகளின் கூட்டணி தொடரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement