இருளிப்பட்டு - நெடுவரம்பாக்கம் சாலையை சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி:இருளிப்பட்டு - நெடுவரம்பாக்கம் இடையேயான சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
சோழவரம் அடுத்த இருளிப்பட்டு கிராமத்தில் இருந்து நெடுவரம்பாக்கம் வழியாக, ஆண்டார்குப்பம் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டும், ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சிறு மழை பெய்தாலும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். கார் மற்றும் பள்ளி வேன்கள் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக சாலை புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
சோழவரம் ஒன்றிய நிர்வாகத்தின் கீழ், அழிஞ்சிவாக்கம், நெடுவரம்பாக்கம், ஆண்டார்குப்பம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கும், 3 கி.மீ., சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.