கால்நடை சிறப்பு முகாமில் 1,025 மாடுகளுக்கு சிகிச்சை

திருத்தணி:திருத்தணி அருகே நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில், 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தாது உப்பு பாக்கெட் வழங்கப்பட்டன.

திருத்தணி ஒன்றியம் ஆர்.வி.என்.கண்டிகையில், திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

முகாமை, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் எஸ்.தாமோதரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கால்நடை உதவி மருத்துவர்கள் மத்துார் எத்திராஜ், கீச்சலம் அருண்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மஞ்சுளா ஆகியோர், 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில், 104 பசுக்கள், 101 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 502 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 10 பசுவிற்கு செயற்கை கருவூட்டல், 198 கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசிகள் உட்பட மொத்தம், 1,025 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு, கால்நடை உதவி இயக்குநர் தாமோதரன் பரிசுகள், தாது உப்பு பாக்கெட்டுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், கால்நடை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement