சேவலை வேட்டையாடும் சிறுத்தையால் மக்கள் பீதி

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம், 40; விவசாயி. இவர், தன் விவசாய நிலத்தில் வீடு கட்டி வசிக்கிறார்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வீட்டின் அருகே சத்தம் கேட்டு, வெளியே வந்துள்ளார். அப்போது, வீட்டின் வெளியே இருந்த சேவலை சிறுத்தை ஒன்று கவ்விச்சென்றது.

இக்காட்சி வீட்டிலிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. அதே வீட்டில், மூன்று மாதமாக கோழி மற்றும் நாயை சிறுத்தை வேட்டையாடி உள்ளது. தற்போது அதே வீட்டில் சேவலை கவ்விச்சென்ற சம்பவம், கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட, பாலக்கோடு வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement