சாட்சியம் அளிக்கக்கூடாது என மிரட்டிய கொலையாளி கைது

கோவை : நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க கூடாது என மாமியாரை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை, பீளமேடு, என்.ஜி.ஆர்., வீதியை சேர்ந்தவர் மலைமணி, 56. இவரது மகள் பிரியங்காவை தேனி, போடிநாயக்கனுாரை சேர்ந்த மகாராஜன், 40 என்பவருக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். பிரியங்கா, மகாராஜன் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

கணவன் - மனைவி இடையே, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாராஜன் தனது மகன் கண் முன், பிரியங்காவை கொலை செய்தார். அந்த வழக்கில், மகாராஜன் உட்பட அவரது குடும்பத்தினர் ஏழு பேரை, தேனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை சிறையில் இருந்த மகாராஜன், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்த வழக்கில் சாட்சியாக உள்ள, மகாராஜனின் மகன் பீளமேட்டில் உள்ள அவரது பாட்டி மலைமணி வீட்டில் வசித்து வருகிறார்.

அவரை இங்கிருந்து அழைத்து செல்ல, மகாராஜன் முயற்சித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி மாலை, பீளமேடு வந்த மகாராஜன் அவரது மகனை அழைத்து செல்ல முயற்சித்தார். மலைமணி மறுத்ததால், அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சாட்சி அளித்தால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி சென்றார்.

மலைமணி பீளமேடு போலீசில் அளித்த புகாரில், போலீசார் மகாராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement