'தங்கள் குழந்தைகளிடம் அப்பாக்கள் சொல்லும் செல்லப் பொய்கள் அழகானது'

கோவை, : திரைப்பட இயக்குனர் ராம் இயக்கிய, 'பறந்து போ' திரைப்படம் அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சி, கோவை பிராட்வே திரையரங்கில் நேற்று திரையிடப்பட்டது.

இதில் பங்கேற்ற இயக்குனர் ராம் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த படம், குழந்தைகள் மற்றும் அவர்களின் அம்மா, அப்பாவுக்கான படம். ஒரு மலையில் ஏறும் போது, குளத்தில் நீந்தும் போது, கடலை பார்க்கும் போது, குளிர்ந்த காற்று உங்கள் மீது மோது போது, உங்களுக்கு என்ன உணர்வு தோன்றுமோ, அந்த உணர்வு இந்த படத்தை பார்க்கும் போது தோன்றும்.

தன் குழந்தைகளிடம் அப்பாக்கள் சொல்லும் சின்னச்சின்ன பொய்கள் மிக அழகானது. குழந்தைகள் கேட்கும் ஒரு பொருளை வாங்கி கொடுக்க முடியாத அப்பா, 'பணம் இல்லை, என்னால் வாங்கி கொடுக்க முடியாது' என்று சொல்ல மாட்டார்.

'பிறகு வாங்கி தருகிறேன்' என்று சொல்லி குழந்தையை சமாதானப்படுத்துவார். உண்மையில் அவரால் அதை வாங்கி கொடுக்க முடியாது என்றாலும், அந்த நேரத்தின் அவர் சொல்லும் அந்த சிறிய பொய் மிகவும் அழகானது.

அப்பாக்கள் குழந்தைகளிடம் இப்படி சொல்லும் செல்ல பொய்கள், குழந்தைகளிடம் நம்பிக்கையையும், சமாதானத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த படத்தின் கதை அப்பாவுக்கும், மகனும் இடையில் உள்ள அன்பை மிக எளிமையாக நகைச்சுவையுடன் சொல்லும் கதையாகும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

குடும்பஸ்தன் பட இயக்குனர் ராஜேஷ், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement