இயற்கை விவசாயத்திற்கு மாற அமுல் அழைப்பு

1

மதுரை : விவசாயிகள் ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்த்து முழுமையாக இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் இணைந்துள்ள விவசாயிகள் முதற்கட்டமாக இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்' என அமுல் நிறுவன இந்தியத் தலைவர் கோபால் சுக்லா பேசினார்.


மதுரையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.), அமுல், ரிச் பிளஸ் நிறுவனங்கள் சார்பில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் (எப்.பி.ஓ.,) தலைவர்களுக்கான மாநாடு நடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த 300 எப்.பி.ஓ., பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



இன்பினிட் சேவா தலைவர் நளினி வரவேற்றார். மதுரை அக் ஷயா ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நித்யாதீபானந்தா துவக்கி வைத்தார்.

அமுல் நிறுவன இந்தியத் தலைவர் கோபால் சுக்லா பேசியதாவது:



விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்தி அதற்கான இயற்கை உரங்களை வழங்குவதே எங்கள் நோக்கம். அமுல் நிறுவனம் செயல்படும் இடங்களில் 15 லட்சம் கறவை மாடுகள் உள்ளன. கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் பாலுக்குரிய விலையைப் பெறுகின்றனர். அவர்களிடமே மாட்டு சாணத்தை பெற்று அறிவியல் ரீதியான முறையில் இயற்கை உரத்தை தயாரிக்கிறோம்.


அமுல் நிறுவனத்தின் ஆய்வகத்திலும் தேசிய தர ஆய்வகத்திலும் இயற்கை உரங்களை பரிசோதித்து நிரூபித்து நான்காண்டுகளாக இயற்கை உரவிற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். ஆர்கானிக் தானியம், பருப்பு வகைகள், வெல்லம், தேன், காபி, டீயை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆனால் இயற்கை விவசாயம் செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது.



ஆர்கானிக் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் விவசாயிகள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவதை தவிர்த்து முழுமையாக இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் இணைந்துள்ள விவசாயிகள் முதற்கட்டமாக இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். 36 லட்சம் விவசாயிகளுடன் கூட்டுறவு நிறுவனமாக இருந்து தற்போது வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனமாக முன்னேறியுள்ளது.

தள்ளுபடி விலையில் உரங்கள்



ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் மண்ணில் ஆர்கானிக் கார்பன் அளவு 1.7 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீத அளவு குறைந்து விட்டது.




வனப்பகுதிகளில் உள்ள மண்ணில் ஆர்கானிக் கார்பன் அளவு சரியாக உள்ளது.
அமுல், ரிச் பிளஸ் உடன் இணைந்து தள்ளுபடி விலையில் இயற்கை உரங்கள் வழங்குகிறது. இயற்கை விவசாயம் செய்வதற்கான கடனுதவியை ஐ.ஓ.பி., வழங்குகிறது. தமிழகத்தில் நாமக்கல்லில் மண் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு மண்ணில் உள்ள சத்துகளை பரிசோதனை செய்து அதற்கேற்ப இயற்கை உரம் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களிலும் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றார்.



ஐ.ஓ.பி., நிர்வாக இயக்குநர் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா பேசுகையில்,''இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்காக, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்காக ரூ.50ஆயிரம் முதல் ரூ.10 கோடி வரை கடன் வழங்குகிறோம்'' என்றார்.


நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் ஆனந்த் பேசுகையில்
''ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு எப்.பி.ஓ.வில் இருந்தும் 20 எக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்.




ரசாயன உரம் பயன்படுத்தும் போது கிடைக்கும் மகசூலை விட இயற்கை விவசாயத்தில் முதலாண்டில் மகசூல் குறையும். அதற்கான இழப்பீட்டை நபார்டு வங்கி வழங்கும். இதற்காக 300 எப்.பி.ஓ.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்'' என்றார்.


ரிச் பிளஸ் நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன், ஐ.ஓ.பி., செயல் இயக்குநர் தனராஜ் பங்கேற்றனர்.

Advertisement