‛எங்களையே சுற்றி சுற்றி வருகிறீர்கள் நயினார் நாகேந்திரன் சலிப்பு

திருநெல்வேலி: 'ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களோ என்ற எண்ணம் வருகிறது. எங்களிடமே சுற்றி சுற்றி வருகிறீர்கள். உங்களுக்கு மனசாட்சி வேண்டாமா,'' என, திருநெல்வேலயில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனை நேற்று சந்தித்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணி உறுதியான கூட்டணி. அதில் மாறுபாடு இல்லை. கூட்டணி குறித்து என்னை தான் தினமும் கருத்து கேட்கிறீர்கள். ஆனால் தி.மு.க., கூட்டணியின் தலைவரான ஸ்டாலினை நீங்கள் சந்தித்து, இதுபோல கேள்வி கேட்பதில்லை. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மீண்டும் எத்தனை சீட் தருவார்கள் என எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா.

காங்., தலைவர் செல்வ பெருந்தகை, பா.ம.க., தலைவர் ராமதாஸை சந்தித்தது இப்போது இல்லாவிட்டாலும் பின்னர் கூட அரசியலாக வாய்ப்புள்ளது.

இது குறித்து நீங்கள் கேள்வி கேட்கவில்லை. ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களோ என்ற எண்ணம் வருகிறது. எங்களிடமே சுற்றி சுற்றி வருகிறீர்கள். உங்களுக்கு மனசாட்சி வேண்டாமா.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இனி நிச்சயமாக தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது. இதைத் தேர்தலில் தமிழக மக்கள் பிரதிபலிப்பார்கள். பா.ஜ.,வில் அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என்றார்.

Advertisement