ரூ.3 கோடி கடனுக்காக பால்பண்ணைக்கு 'சீல்' உரிமையாளர் தற்கொலை

மதுரை: மதுரையில் தொழில் வளர்ச்சிக்காக வாங்கிய ரூ.3 கோடி கடனுக்காக பால்பண்ணைக்கு வங்கி 'சீல்' வைத்ததால் விரக்தியில் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் மேலுார் ஏ.மலம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி 52. எட்டு ஆண்டுகளாக மகனுடன் சேர்ந்து வீட்டருகே 'வசந்தம் டைரி மில்க்' என்ற பெயரில் பால்பண்ணை நடத்தி வந்தார். தொழில் வளர்ச்சிக்காக 3 ஆண்டுகளுக்கு முன் தனியார் வங்கியில் ரூ.3 கோடி கடன் வாங்கினார். மாதம் ரூ.3 லட்சம் தவணை செலுத்தி வந்தார். 7 மாதங்களாக தவணை செலுத்தாததால் 5 நாட்களுக்கு முன் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

அதில் 'ஜூன் 27 ல் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால் பால்பண்ணைக்கு 'சீல்' வைக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் ராஜபாண்டி மனஉளைச்சலுக்கு ஆளானார். நேற்றுமுன்தினம் மகன் ஜெர்வின்பால், பணத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக வெளியே சென்ற நிலையில், மதியம் பால்பண்ணைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இதனால் விரக்தி அடைந்த ராஜபாண்டி யாரிடமும் சொல்லாமல் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். இதை அறியாத ஜெர்வின்பால் இரவு 7:00 மணிக்கு தந்தையின் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது, 'பயணிகள் அமரும் இடத்தில் உங்கப்பா விஷம் குடித்து இறந்து கிடக்கிறார்' என ஒருவர் தெரிவித்தார். அங்கு வந்த ஜெர்வின்பால், மாட்டுத்தாவணி போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.

Advertisement