பிரியங்கா- வருண் சந்திப்பு: ராகுலுக்கு கசப்பு

6


புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவி மிகவும், 'பவர்புல்!' ஆனால், ஒரு பொதுச்செயலருக்கு மட்டும், எந்தவித பொறுப்பும் முறையாக தரப்படாமல் ஓரங்கட்டி வைத்துள்ளனர். இந்த பதவியில் இருப்பது வேறு யாருமல்ல... ராகுலின் சகோதரி பிரியங்கா.


என்னதான் அண்ணன் - தங்கையாக இருந்தாலும், அரசியல் என வந்துவிட்டாலே பிரச்னை தான். கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல், ஆனால், கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராகுல், தன் சகோதரியான பிரியங்காவிற்கு பெரும் பொறுப்பை கொடுக்க விரும்பவில்லையாம்.

இதை, தன் தாயார் சோனியாவிடம் கறாராக சொல்லிவிட்டாராம் ராகுல். 'கட்சியில் தனக்கு ஏதாவது பொறுப்பு கொடுப்பர் என, எதிர்பார்த்து வெறுத்துப் போய்விட்டார் பிரியங்கா' என்கின்றனர். ராகுலின் சித்தப்பா சஞ்சயின் நினைவு தினத்தன்று, ஒரு அதிரடி வேலையை செய்துள்ளார் பிரியங்கா. அன்றைய தினம், சஞ்சயின் மகனான வருணை சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார் பிரியங்கா.



வருண் பா.ஜ.,வில் இருந்தாலும், கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். பிலிபித் தொகுதியிலிருந்து, தொடர்ந்து எம்.பி.,யாக இருந்த இவருக்கு, 2024 பார்லிமென்ட் தேர்தலில், 'சீட்' மறுக்கப்பட்டது. 'வருணும், பிரியங்காவும் நெருக்கம்' என்கின்றனர்.


'வருணை எப்படியாவது காங்கிரசுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பிரியங்காவின் விருப்பம்' என்றும் கட்சிக்குள் பேசப்படுகிறது. ஆனால் வருணுக்கும், ராகுலுக்கும் ஆகாது; எனவே, பிரியங்கா -- வருண் சந்திப்பு ராகுலுக்கு பிடிக்கவில்லையாம்.


கேரள மாநிலத்தின் நிலம்பூர் சட்டசபை தொகுதிக்கு, சமீபத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது; இங்கு ஆளுங்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டசபை தொகுதி, வயநாடு பார்லிமென்ட் தொகுதிக்குள் அடங்கும். வயநாடு எம்.பி.,யாக இருப்பவர் பிரியங்கா.


இது, பிரியங்காவின் ஆதரவாளர்களுக்கு பெரும் வெற்றி. 'பிரியங்காவை மறைந்த இந்திராவாக மக்கள் பார்க்கின்றனர்; அப்படியிருக்க, அவரை காங்கிரஸ் சரியாக பயன்படுத்தவில்லை' என, காங்., தலைவர்கள் சிலர் வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement