வெறும் இணைப்பு தான்... பிணைப்பு இல்லை; அ.தி.மு.க., - பா.ஜ., குறித்து திருமா கருத்து

மதுரை: அ.தி.மு.க., பா.ஜ., இடையே இணைப்பு இருக்கிறதே தவிர, பிணைப்பு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு கவனம்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;
மேலவளவு முருகேசன் உள்ளிட்டோரை வெட்டி சாய்த்த துயரமான நாள். ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கியுள்ள மேலவளவு கிராமத்தை அரசு சிறப்பு கவனம் செலுத்தி, மேம்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தோம்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து, அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழும் போது, போலீசார் எதிர்தரப்பினரிடமும் மனு பெற்று, பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்குப்பதிவு செய்வதே தொடர்கிறது. இது அதிகார வர்க்கத்தின் ஓரவஞ்சனை நடவடிக்கையாக உள்ளது. தலித் விரோத நடவடிக்கையாக உள்ளது.
ஜனநாயகத்திற்கு எதிரானது
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு நீதித்துறை வழங்கியுள்ள தீர்ப்பு ஒரு ஜனநாயகப் படுகொலை. அரசியல் கட்சிகள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. போலீஸார், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வி.சி.க.,வின் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் முனைப்பாக செயல்படுகின்றனர். இது வன்மையாக கண்டனத்திற்குரியது.
நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். தி.மு.க., காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள், அரசியல் உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். யாரோ ஒருவர் தொடுக்கும் வழக்குகளில் இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானதாக பார்க்கிறோம். இந்த தீர்ப்பு ஏற்புடையதல்ல
இணைப்பு மட்டுமே
அமித் ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என்று திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். இந்த விஷயத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தற்போது பதிலளித்துள்ளார். அவர் சொல்லி இருக்கும் பதில் பா.ஜ.,வுக்கு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கூட்டணி ஆட்சி என்பது இங்கு இல்லை. அ.தி.மு.க., அதற்கு உடன்படாது என்ற விடையை சொல்லியுள்ளார்.
அதேபோல, அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். யார் அந்த முயற்சியை செய்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்ய வாய்ப்பில்லை. அப்படி செய்ய முடியாது. கூட இருக்கும் கட்சியால் தான் செய்ய முடியும். எனவே, அதுவும் பா.ஜ.,வுக்கு தான். அ.தி.மு.க., பா.ஜ., இடையே இணைப்பு இருக்கிறதே தவிர, பிணைப்பு இல்லை.
பா.ஜ., வெளியேறினால் அ.தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., இடம்பெறுமா என்ற கேள்வி யூகமானது என்று பலமுறை சொல்லியுள்ளேன். அப்படி ஒரு நிலை வரும் போது கேளுங்கள், பதில் சொல்கிறேன்.
பொறுப்பான வார்த்தை
தந்தை, மகனுக்கு இடையிலான இடைவெளி பெரிதாகி விடக் கூடாது என்ற நோக்கத்தில் சொன்ன பொறுப்பான வார்த்தை தான். அந்தக் கட்சி எப்படியாவது போகட்டும் என்று நினைக்கவில்லை. பா.ம.க., எளிய மக்களுக்காக போராடுகிறது என்று நம்புவதால், அவர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் கூறினேன்.
அந்த இடைவெளியை பயன்படுத்தி பாசிச சக்திகள் உள்ளே நுழைந்து விடக் கூடாது, எச்சரிக்கையாக இருங்கள். யாரோ சொல்வதை விட தந்தை சொல்வதைக் கேளுங்கள் என்று பொறுப்பான வார்த்தையாக சொன்னேனே தவிர, பிணைப்பான வார்த்தையாக சொல்லவில்லை, எனக் கூறினார்.













மேலும்
-
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி
-
லலித் மோடியின் ரூ.10.65 கோடி இழப்பீடு தொகை மனு:சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
-
ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலை நடுவே மரங்கள்: வாகன ஓட்டிகள் திக்... திக்...
-
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களின் மீட்க கோரிக்கை
-
ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
-
மருத்துவர்கள் தினத்திலாவது எங்களை நினைப்பீர்களா ? அரசு டாக்டர்கள் கேட்கின்றனர்