பைக்குகள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு

மயிலாடுதுறை: பைக்குகள் நேருக்கு நேர் மோதி, இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், வாளவராயன் குப்பத்தை சேர்ந்தவர் கீர்த்திவாசன், 26. இவரது உறவினர், கடலுாரை சேர்ந்த அஸ்வின் முத்தையா, 23. இருவரும், 'பல்சர்' பைக்கில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை சென்றனர். பைக்கை அஸ்வின் முத்தையா ஓட்டியுள்ளார்.

வாளவராயன் குப்பத்தை சேர்ந்த ஆகாஷ், 21, தனுஷ், 22, ஆகிய இருவரும், 'ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளண்டர் பிளஸ்' பைக்கில் மங்கைநல்லுாரில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவ்விரு பைக்குகளும் கம்மங்கொல்லை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில், ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற மூவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அஸ்வின் முத்தையா இறந்தார். கீர்த்தி வாசன், தனுஷ் சிகிச்சையில் உள்ளனர். பெரம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement