தி.மு.க., அரசுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு; எச்சரிக்கிறார் அன்புமணி

சென்னை: 'சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும்' என்று தி.மு.க., அரசுக்கு பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; 2027ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல் நிலையங்கள், வட்டங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான எல்லைகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தலைமைப்பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, புதிய மாவட்டங்கள், வட்டங்களை அமைப்பதாக இருந்தால், நடப்பாண்டிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள் ஆகும்.
2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களும், வட்டங்களும் அமைக்கப்படவில்லை என்றால், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையான முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அவற்றை செய்ய முடியாது. அதன்படி, நடப்பு தி.மு.க., ஆட்சியில் புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு இது தான் கடைசி வாய்ப்பு ஆகும்.
2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் (வாக்குறுதி எண் 380) என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் பரப்புரையின் போது தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தைத் பிரித்து பழனி மாவட்டம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். கடலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரே ஒரு புதிய மாவட்டம் கூட ஏற்படுத்தப்படவில்லை.
தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசு, புதிய மாவட்டங்கள் தொடர்பான வாக்குறுதியையும் இன்னும் நிறைவேற்றவில்லை. புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு செலவுகள் எதுவும் கிடையாது. புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, அவை இருக்கும் பணியாளர்களைக் கொண்டு தான் நிரப்பப்படவுள்ளன. ஆனாலும், புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு என்ன தடை? என்று தெரியவில்லை.
பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான அரசின் சேவைகளை பெற நீண்ட தூரம் அலைய வேண்டியிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அமைப்பது மட்டும் தான் தீர்வு. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்
-
விமான முன்பதிவு ரத்து:கார்களை திருடி வீடு திரும்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
-
இந்தியா தயாரித்து வரும் 'அக்னி-5' பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணைகள்!
-
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை
-
சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் நியமனம்: விண்ணப்பம் வரவேற்பு
-
கடமை தவறினால் கடுமையான நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
-
அத்துமீறி நடந்து கொள்ளும் போலீஸ்: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு