அத்துமீறி நடந்து கொள்ளும் போலீஸ்: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

சென்னை: ''போலீசார் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். விசாரணை என்ற பெயரில், சட்டத்துக்கு அப்பாற்பட்டு கொடூரமான தாக்குதல் நடத்துவது, என்கவுன்டர் செய்வது கடும் கண்டனத்துக்குரியது,'' என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்கவுன்டர், லாக் அப் மரணம், விசாரணையின் போது நடந்த மரணம் என 24 சம்பவங்கள் உள்ளது. போலீசார் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர விசாரணை என்ற பெயரில், சட்டத்துக்கு அப்பாற்பட்டு கொடூரமான தாக்குதல் நடத்துவது என்கவுன்டர் செய்வது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமான போலீசார் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் உங்கள் நண்பன் என்று சொல்லிக்கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடப்பது போலீஸ்துறைக்கு பெருமை சேர்க்கும் விஷயம் அல்ல. போலீசார் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். மாறுவதற்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இத்தகைய கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ்துறைக்கு முதல்வர் தான் பொறப்பு என்பது உலகறிந்த விஷயம். பல போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்கிறோம்.
நான் மழுப்பலாக சொல்லவில்லை. இது மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னை. போலீசார் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். அதில் மார்க்சிஸ்ட் சமரசம் செய்து கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.





