வங்கி முன்னாள் மேலாளர் 71 வயதில் சி.ஏ., தேர்ச்சி

1

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், 71 வயதில் சி.ஏ., தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால், 71. இவர், 1976ல் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்டு ஜெய்ப்பூரில் கிளர்க்காக பணியில் சேர்ந்தார்.

இவருக்கு தர்ஷனா என்ற பெண்ணுடன் திருமணமாகி லலித், அமித் என இரு மகன்கள் உள்ளனர். லலித் சி.ஏ., முடித்து டில்லியில் பணியாற்றுகிறார். இளைய மகன் அமித் வருமானவரித் துறையில் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், 38 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றிய அகர்வால் கடந்த 2014ல் உதவி பொதுமேலாளராக பணி ஓய்வு பெற்றார்.

கடந்த 2020 நவம்பரில் மனைவி தர்ஷனா இறந்ததை அடுத்து பகவத் கீதையை வாசிக்க துவங்கினார். பின்னர் பல்வேறு புத்தகங்களை படிக்க துவங்கினார்.

தொடர்ந்து, தன் பேத்திக்கு சி.ஏ., தொடர்பான பாடங்களை சொல்லித் தந்த அவர், முனைவர் பட்டம் படிக்க விரும்பினார்.

அப்போது தான், இளைஞர்கள் பலருக்கு சவாலாக உள்ள சி.ஏ., எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பை படிக்க அவரது பிள்ளைகள் வற்புறுத்தினர்.

இதையடுத்து, கடந்த 2021 ஜூலையில் சி.ஏ., தேர்வுக்கு பதிவு செய்த அவர், தோள் வலியை பொருட்படுத்தாமல் தினமும் 10 மணி நேரம் கடுமையாக படித்து தேர்வுக்கு தயாரானார்.

மூன்று கட்டமாக நடத்தப்படும் தேர்வில், பவுண்டேஷன் தேர்வில் 2022 மே மாதம் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2023 ஜனவரியில் இரண்டாம் கட்ட தேர்வில் வென்றார்.

பின்னர், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதித்தேர்வில் தோல்வியை தழுவினார். எனினும் தொடர் முயற்சிக்கு பின் இந்த ஆண்டு நடந்த சி.ஏ., இறுதிக்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற 12,474 பேரில் அகர்வாலும் ஒருவர். கடந்த 6ம் தேதி வெளியான தேர்வு முடிவு, இவரை பட்டய கணக்காளராக்கி உள்ளது.

இவர், சி.ஏ., படிப்புக்காக பயிற்சி வகுப்புக்கு செல்லவில்லை.

இவரது பேத்தியின் புத்தகமும், 'யு டியூப்' சமூக ஊடகமும் தான் சி.ஏ., தேர்வில் வெற்றி பெற உதவியதாகவும், எந்த வேலை செய்தாலும் உறுதியாக செய்ய வேண்டும் என்பதை பகவத் கீதை தனக்கு கற்று கொடுத்ததாகவும் அகர்வால் தெரிவித்தார்.

Advertisement