டில்லி உஷ்ஷ்ஷ்: நடிகையை நம்பினால்...?

3

புதுடில்லி: பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.

எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் இந்திரா வேடத்தில் நடித்திருந்தார். 2024 பார்லிமென்ட் தேர்தலில், ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில், பா.ஜ., இவரை வேட்பாளராக அறிவித்தது; இவரும் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். இதையடுத்து தான் பிரச்னை ஆரம்பித்தது பா.ஜ.,விற்கு!

விவசாயிகள் போராட்டம் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார்; இதனால், பா.ஜ., மேலிடம் அதிர்ச்சி அடைந்தது.

தற்போது, ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம், மழை காரணமாக, 85 பேர் இறந்துள்ளனர். கங்கனாவின் மண்டி தொகுதியிலும் வெள்ளம், நிலச்சரிவு என, பல பேரழிவுகளால் மக்கள் தவித்து வருகின்றனர்; ஆனால், தன் தொகுதிக்கு போகாமல் மும்பையிலேயே இருந்தார்.

'உடனே உங்கள் தொகுதிக்கு செல்லுங்கள்' என, கட்சி மேலிடம் சொல்ல, வேண்டா வெறுப்பாக மண்டிக்கு சென்றார் கங்கனா. மக்கள் இவரிடம் குறைகளைச் சொல்ல, 'நான் எந்த பொறுப்பிலும் இல்லை; அமைச்சர் பதவியிலும் இல்லை; என்னிடம் பணமும் கிடையாது. அப்படியிருக்க, நான் என்ன செய்ய முடியும்?' என, அவர்களிடம் கூறினாராம். உடனே, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது; வெறுத்துப் போனது பா.ஜ., மேலிடம்.

கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமாக இருப்பவர் ஜெ.பி. நட்டா; இவரும் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இவர் மண்டிக்கு சென்றார். உடன் மாநில எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்களும் சென்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, இரண்டு எம்.எல்.ஏ.,க்களை நியமித்தார்; ஆனால், தொகுதி எம்.பி.,யான கங்கனாவை நட்டா அழைத்துச் செல்லவில்லை.

சினிமா மோகத்தை நம்பி, இதுபோன்றவர்களை எம்.பி.,யாக்கினால் இந்த கதிதான்!

Advertisement