காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; 3வது நாளில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 3வது நாளாக, இன்று (ஆகஸ்ட் 03) தொடர்ந்து வரும் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கையில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம் ராணுவத்துக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. நம் ராணுவத்தினருடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், காஷ்மீர் போலீசார் இணைந்து, 'ஆப்பரேஷன் அகல்' என்ற பெயரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஸ்ரீநகர் அருகே டச்சிகாம் தேசிய பூங்கா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென நம் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு நம் வீரர்களும் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். இவர்கள் டி.ஆர்.எப்., அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 03) 3வது நாளாக, ராணுவ தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.






