கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம்... மேம்படுத்தப்படுமா; தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது கல்வராயன் மலை பகுதி. இது, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பரவி காணப்படுகிறது.
கல்வராய் மலை ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் 150 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன். இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் வசித்துவருகின்றனர்.
மலைப் பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, தேன் சேகரித்தல் போன்ற மலை சார்ந்த சிறு தொழில்களையே நம்பியுள்ளனர். இதில் போதிய வருமானம் கிடைப்பதில்லை.
இதனால் கல்வராயன் மலை பகுதியை சேர்ந்த மக்கள் தங்களின் வறுமையை போக்கிக்கொள்ள முறையான தொழில் இல்லாததால் , கர்நாடக மாநிலம், மைசூர், மாண்டியா போன்ற இடங்களுக்கு மிளகு பறித்தல், மரம் வெட்டுதல் போன்ற எஸ்டேட் பணிகளுக்கும், சென்னை கோவை போன்ற பெரு நகரங்களுக்கு கட்டட கூலி வேலைகளுக்கும், கேரளா மாநிலத்திற்கு செங்கல் சூளை பணிகளுக்கும் சென்று அங்கேயே பல மாதங்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் பண தேவையை அறிந்து கொண்ட சிலர் தங்களின் சுய நலத்திற்காக அப்பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை சாராயம் காய்ச்சுதல் மற்றும் சாராயம் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபத்தி வருகின்றனர்.
இதே போல் பலர் தங்களின் அறியாமயைால் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த ஆண்கள் பலர் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
செம்மரம் கடத்தல் தொடர்பான வழக்குகளில் 500 க்கும் மேற்பட்டோர் சிக்கி சித்துார், நெல்லுார், கடப்பா போன்ற பல்வேறு மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் செம்மரம் கடத்தலின் போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 5 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். மேலும் பலர் நோய்வாய்பட்டு ஆந்திர மாநில காடுகளிலேயே இறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளது.
கல்வராயன் மலையில் உரிய வேலை வாய்ப்பு இல்லாததால் சாராயம் மற்றும் செம்மரம் கடத்தல் வழக்குகளில் முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்கள் பலர் சிக்கியுள்ள அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் பெரு நகரங்களில் பல நாட்கள் தங்கி வேலை செய்தும் அவர்களுக்கு பெரிய அளவிலான வருவாய் இல்லாததால் கல்வராயன் மலை பகுதி மக்களின் பொருளாதாரம் இன்றளவும் கேள்ளவிக்குறியாகவே உள்ளது.
கல்வராயன் மலை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சுய தொழில் துவங்குதல், கறவை மாடு வழங்கல், ஆடு, கோழி வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல் போன்றவைகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கி வருகிறது. தொடர்ந்து பல்வேறு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் வேலைவாய்ப்பு முகாம்களில் கிடைக்கும் பணிகள் வெளி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தங்கி வேலை செய்யும் நிலை உள்ளது. இதனால் அங்கு வழங்கும் சம்பளம் அவர்களின் செலவிற்கே போதாத நிலை உள்ளது.
மேலும் கல்வராயன் மலையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு அரசின் அனைத்து துறை சார்பில் பல கோடி மதிப்பில் இப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தனர். கொரோனா தோற்றினால் கோடை விழா நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. அதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கல்வராயன் மலையில் கோடை விழா நடத்தப்பட வில்லை.
கல்வராயன் மலையில் மரவள்ளி, மக்காசோளம், கடுக்காய் போன்றவைகள் அதிகளவில் விளைகின்றன. மேலும் தற்போது மிளகு சாகுபடியும் அதிகரித்து வருகின்றன.
கல்வராயன் மலை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களின் நிரந்தர வருமானத்திற்கு வழி செய்யும் வகையிலம் கல்வராயன் மலையில் மரவள்ளி, கடுக்காய், மற்றும் மக்காசோளத்தை மூல பொருட்களாக கொண்டும் செயல்படும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.
இந்த தொழிற்சாலைகளால் இப்பகுதி மக்களுக்கு குறிப்பாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
எனவே காடுகளின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கல்வராயன் மலையில் தொழிற்சாலைகள் துவங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
கொட்டகை அமைத்து வியாபாரம் 'பலே' ஆடு திருடர்கள் மூவர் கைது
-
அரசு பள்ளி முன் தேங்கிய கழிவுநீரால் சுற்றுச்சுவரில் ஏறி சென்ற மாணவர்கள்
-
தேர்வாய்கண்டிகை சிப்காட் செல்ல மாற்று ஏற்பாடு...விமோசனம்: ரூ.21 கோடியில் கவரைப்பேட்டை சாலை விரிவாக்கம் ;பெரியபாளையம் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
-
அரசு பள்ளிகளுக்கு இடையே மாவட்ட விளையாட்டு போட்டி
-
பயங்கரவாதிக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீதான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
-
சின்னகாவனம் விநாயகர் கோவில் அகற்றம் சாலை விரிவாக்க பணிக்காக நடவடிக்கை