கட்சியின் நலனுக்காக பேசினேன், நீக்குவார்கள் என தெரியாது: செங்கோட்டையன்

33

கோபிசெட்டிபாளையம்: கட்சியின் நலனுக்காக தான் ஒருங்கிணைக்க வேண்டும் என்று பேசினேன், ஆனால் நீக்குவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.



கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டி;


அதிமுக மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், தொண்டர்களின் உணர்வுகள், மக்களின் எதிர்ப்பார்பை பிரதிபலிக்கின்ற வகையில் நேற்றைய தினம் அந்த விளக்கத்தை நான் வெளிப்படையாக தெரிவித்தேன்.


அதற்கு இன்று கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளேன். பொதுவாக, ஜனநாயகம் என்பது ஒரு கட்சியில் ஒரு விளக்கம் கேட்டிருக்கவேண்டும். அந்த விளக்கம் கேட்காமல் இன்று ஜனநாயகத்தை காக்கிறோம், சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் கருத்துகளை சொல்வதற்கு எங்கள் கட்சியில் தடையில்லை என்ற பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும்.


என்னுடைய பணி இதை(ஒருங்கிணைப்பது)நோக்கி தான் தொடரும். நேற்றைய தினம் நான் எடுத்துச் சொன்ன கருத்தின் அடிப்படையில் தொடரும். 6 பேர் என்னை சந்திக்கவில்லை, பச்சைப்பொய் என்று இபிஎஸ் கூறியதற்கு நான் விளக்கம் அளித்துவிட்டேன்.


நாங்கள் சந்தித்தது, கருத்துகளை பரிமாறிக் கொண்டது, பொதுச் செயலாளர் இடத்திலே தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஏறத்தாழ 8 மாதங்கள் முன்னால் இதை தெளிவுபடுத்தி உள்ளேன். கட்சி பொறுப்புகளில் இருந்து நான் நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்பதை இப்போதைக்கு சொல்வதற்கு இல்லை.


இணைப்பு பற்றி பேசுவதற்கு பொதுக்குழு எப்போது கூடியது? பொதுக்குழு கூட்டினால் மட்டும்தான் பேச முடியும். 10 நாட்களுக்குள் இந்த பணியை(ஒருங்கிணைப்பது) துவங்க வேண்டும். ஒரு மாதம் ஆனாலும் பேசி தீர்க்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறேன்.


கெடு விதித்ததை கண்டித்த செம்மலை தர்மயுத்தத்திற்கு போய்விட்டு வந்தவர். அதனால் அவர் அப்படி சொல்லி இருக்கலாம். யார் தான் இந்த கருத்தை வெளிப்படுத்துவது? தொண்டர்கள் எல்லோரும் நினைக்கிறார்கள், இந்த இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று மக்களும் நினைக்கிறார்கள்.


அவர்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள், காலில் கூட விழுந்து இயக்கத்தில் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று காஞ்சிபுரத்திலே பேசி இருக்கிறார்கள். அதற்கு மேலே எந்த நடவடிக்கையும் இல்லை என்கிற போது, ஒரு விளக்கத்தை என் போன்றவர்கள் கட்சியின் நலன் கருதி வெளியிட்டோம்.


என்னை நீக்கியது கட்சிக்கு பாதிப்பா என்பது போக போக தெரியும், காலம் தான் பதில் சொல்லும். டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன், ஹெச் ராஜா, பிரேமலதா எனது கருத்து நியாயமான கருத்து என்று சொல்லி இருக்கிறார்கள். கட்சியின் நலன் கருதி தான் சொல்லி இருக்கிறார். என் நலன் கருதி அல்ல.


காலம் தான் அனைத்துக்கும் பதில் சொல்லும், கொஞ்சம் பொறுத்து இருங்கள்.


இவ்வாறு செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

Advertisement