சாராய வியாபாரிகளுடன் தொடர்பு 28 போலீசார் கூண்டோடு மாற்றம்

சென்னை:'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகே, சட்ட விரோதமாக, மது விற்பனைக்கு அனுமதி, சாராய வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட, எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் என, 28 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுதும், கலால் எனும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், டாஸ்மாக் கடைகள் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய அனுமதிப்பது, சாராய வியாபாரிகளிடம், மாமூல் வசூலிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளன.

ஒரு டாஸ்மாக் கடைக்கு, தினமும், 500 ரூபாய் வசூலிக்கின்றனர் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சாராயம் குடித்து, 67 பேர் பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மீண்டும் அப்பகுதியில் சாராய விற்பனை தலை துாக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாவட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே பரதராமி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், சாராய விற்பனை நடப்பதாக, மாவட்ட எஸ்.பி., மயில்வாகனனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, நேரடி விசாரணையில் களமிறங்கினார்.

அப்போது, மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சாராய வியாபாரிகளிடம் தொடர்பில் இருப்பதும், மாமூல் வசூலிக்கும் தகவலும் கிடைத்து உள்ளது.

இதையடுத்து, வேலுார் மற்றும் குடியாத்தம் பகுதி யில், மதுவிலக்கு அமலாக் கப் பிரிவில் பணிபுரிந்த, ஒன்பது சப் - இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 28 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement